Step into an infinite world of stories
Religion & Spirituality
காலக்கிரமப்படிப் பார்த்தால் ரமணர் அருளிய பாடல் தொகுப்புகளின் வரிசை அருணாச்சல அக்ஷர மணமாலை,...உபதேச உந்தியார்,... உள்ளது நாற்பது.... என்று போகும். அவரது படைப்புகள் அனைத்திலுமே அக்ஷர மணமாலை உள்ளடக்கிய “அருணாச்சல ஸ்துதி பஞ்சகம்” ஒன்றில்தான் பக்தி ரசம் ததும்பும். ஏனைய தொகுப்புகள் எல்லாமே ஞான ரசம் கொண்டவைதான். படிப்பதற்கும், புரிந்து கொள்ளுவதற்கும் மேற்கண்ட வரிசையில் உள்ள படைப்புகளில் முன்னே வருவது எளிதானதாகவும், பின்னே வருவது போகப்போக கடினமானதாகவும் இருக்கிறது என்பது பலரது அனுபவம்.
ஆனாலும் நான் செய்த முன்வினைப் பயனோ என்னவோ, எனக்கு முதலில் அறிமுகமாகியது "உள்ளது நாற்பது" பாடல்களே. அவைகள் எனக்கு அறிமுகம் ஆகும் சமயம், அந்த நூலின் பிரதியும்என்னிடம் கிடையாது. பம்பாயில் வேலை பார்த்து விட்டு ஒய்வு பெறும் போது சென்னை வந்து தங்கிய JBS என்று நாங்கள் அழைத்த திரு. J. பாலசுப்பிரமணியன் என்ற ஒரு பெரியவரிடம்தான் நான் அவைகளை 1975 -ம் ஆண்டில் கற்றேன். தனது வாழ்நாளின் இறுதி வருடங்களில் இந்தப் பணியை அவர் என் பொருட்டு செய்து முடித்தார். அவர் சொல்லி நான் கேட்டு ஒவ்வொரு செய்யுளையும் என் கைப்பிரதியாக எழுதி வைத்துக் கொண்டேன். அந்த 83 பாடல்களையும் அவர் எனக்கு சுமார் நான்கு நாட்களில் படித்து, பொருள் சொல்லி, விளக்கி, அவ்வப்போது கேள்வியும் கேட்டுக் கொண்டிருந்தார். அவரும் என்னைப் போலவே பம்பாயில் இன்னொரு ரமண பக்தரிடம் அவை அனைத்தையும் குருமுகமாகக் கற்றுக் கொண்டாராம்.
"உள்ளது நாற்பது" கற்று முடித்த பின்புதான் "உபதேச உந்தியா"ரும், அதன் பின்னரே "அக்ஷர மணமாலை"யும் படித்தேன். ஆக எனது பயணம் இந்த மூன்று தொகுப்புகளைப் பொருத்தவரை பின்னோக்கிச் சென்றிருக்கிறது. ஆனாலும் கடினத்தில் தொடங்கி எளிதானதிற்குச் சென்றதால் எனது பயணம் சுகமானதாகத்தான் இருந்தது.
அந்தப் பெரியவர் அன்று போட்ட அஸ்திவாரத்தில் தான் இந்தக் கட்டுரையை இப்போது என்னால் எழுத முடிந்தது என்று சொன்னால் மிகையாகாது. நான் பெற்ற அந்தப் பெரும் பயனை மற்றோரும் ஓரளவுக்கேனும் பெறலாமே எனும் எண்ணத்தில்தான் இத்தொடரைத் தொடங்கினேன். இதைப் படித்த பலரில் ஒரு சிலரேனும் இப்பணியைத் தொடர்வார்கள் என்னும் நம்பிக்கை எனக்கு என்றும் உண்டு.
அண்மையில் காலமாகிய ரமண பக்தர் திருமதி. கனகம்மாள் அவர்கள் எனக்கு அறிமுகம் ஆகியதே ஓர் அதிசய சந்திப்பில்தான். அவர் ஒரு சுற்றுலாப் பயணியாக நியூயார்க் நகரில் Queens பகுதியில் இருக்கும் "அருணாச்சல ஆஸ்ரம"த்திற்கு வந்திருந்தார். அப்போது நானும் அங்கு எதேச்சையாகப் போயிருந்தேன். அவருக்கு ஆங்கிலம் சரளமாக வராததால், அவரது தமிழ்ப் பேச்சை என்னை மொழிபெயர்க்கச் சொன்னார்கள். அப்படியாக அவர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் ரமணாஸ்ரமத்தின் அருகிலேயே தங்கியிருந்ததால் 2009-ம் ஆண்டு வரை அவ்வப்போது நான் சந்தித்துக் கொண்டிருந்தேன். அவர் எழுதி ரமணாஸ்ரமம் வெளியிட்டுள்ள "ஸ்ரீ ரமண நூற்றிரட்டு உரை" ஒன்றையே எனது துணை நூலாகக் கொண்டு இந்தத் தொடரை அளித்துள்ளேன். "உள்ளது நாற்பது" தொகுப்பில் இருந்து இந்தத் தொடரின் தலைப்புக்கு ஏற்றது என்று நான் எண்ணிய சில பாடல்களை மட்டுமே இத்தொடருக்கு எடுத்துக் கொண்டேன். மற்ற பாடல்களும் தத்துவ சாரத்தைப் பிழிந்துகொடுப்பவைதாம். இந்தத் தொடர் மூலம் வாசகர்கள் எவரேனும் "உள்ளது நாற்ப"தை முதன் முதலாக அறிந்து கொண்டவர்கள் என்றால், அவர்கள் மற்ற பாடல்களையும் தங்கள் முயற்சியினால் படித்து அறிந்து கொள்வது நன்மை பயக்கும்.
Release date
Ebook: February 5, 2020
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International