Step into an infinite world of stories
Religion & Spirituality
பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருப்பதால், ‘விஷ்ணு’ எனும் திருநாமத்துடன் விளங்குபவரை... மண்ணுலகம் காக்கும் மங்களமானவரை... அரவணை மேல் பள்ளிகொண்டோனை, சக்கரம், சங்கு, கதை, பத்மம் திருக்கையில் ஏந்தியோனை, பக்தரைக் காத்து முக்தியளிக்கும் தயாபரனை, அனைத்துமாக அமைந்தவனை, மாதவன் மதுசூதனனை, விசுவரூபியாய் ஓங்கி உலகளந்தோனை, திருவின் உறைவிடமாய் பூதேவியைத் தாங்கியோனை, தண்மதிபோல் குளிர் குணத்தோனை, பக்தர் வழிபடவே, பல சித்தியும் தருவோனை, மயில் தோகை அணிந்த மாயவனை, பரந்தமனத்தவன் பத்மநாபனை, அகிலம் காக்கும் அரவிந்தாட்சனை, பூமிபாரம் சுமக்கும் பரந்தாமனை, துஷ்ட நிக்ரகம் சிஷ்டபரிபாலனம் புரிவோனை, தர்மம் காக்க தானே அவதரிப்பவனை, பக்தர் தம் மனத்தில் உறைபவனை, முகில் வண்ணன் ஸ்ரீ மகாவிஷ்ணுவை வணங்கி, அவர் அருளால் அவரைப் பற்றி அளப்பரிய அன்புடன் எழுதப்பட்ட இந்த ‘ஸ்ரீ மகாவிஷ்ணு மகாத்மியம்’ எனும் புத்தகத்தை, திரு அனந்த பத்மநாப சுவாமியின் பாதார விந்தங்களுக்கு முதலில் சமர்ப்பணம் செய்கிறேன்.
ஸ்ரீ மகாவிஷ்ணுவைப் பற்றி நீ எழுத வேண்டும் என்று, எனக்குள் என் தந்தை ஈசனிடம் இருந்து ஒரு உத்தரவு வந்த போது.. ‘அன்பே சிவம்’ புத்தகம் அப்பாவை (சிவத்தை) நன்கு உணர்ந்ததால், சுலபமாக அவரின் திருவருளாலேயே புத்தக வடிவாகி வெளிவந்ததும் நினைவு வந்தது.
“ஸ்ரீ மகாவிஷ்ணுவும் நானும் ஒன்றே... இருவருமே உனை வழி நடத்துவோம்” என்ற என் அன்புத் தந்தை ஈசனின் ஆணைக்கு ஏற்ப... என்ன எழுதுவது... எப்படி எழுதப் போகிறோம் என்ற என் தவிப்பிற்கு சிறிதும் வகையின்றி, தன்னைப் பற்றிய உணர்தலையும், பொக்கிஷமாய் பல தகவல்களையும் வாரி வழங்கிய எம்பெருமான் ஸ்ரீ மகா விஷ்ணுவின் அன்பும், அருளும், கருணையும், பரிவும், கனிவும்... என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.
ஒரு தாயாய், தந்தையாய், சற்குருவாய், தெய்வமாய், என்னை வழிநடத்திய ஈசனின் மறு வடிவாகவே, என் தந்தை ‘சதுரகிரி அருள்மிகு சுந்தர மகாலிங்க சுவாமி’யின் மறு பதிப்பாகவே, இன்று நான் “மாமா” என அன்புடன் அழைக்கும். என் அம்மான், திருவனந்தபுரம் ஸ்ரீ அனந்தபத்மநாப சுவாமியை என்னால் உணர முடிகிறது.
என்ன... இந்த எழுத்தாளர், ஆதிசிவனைத் தந்தை என்கிறார்... ஸ்ரீஹரியை மாமா என்கிறார்... ஏதும் பித்துப் பிடித்து விட்டதோ என எண்ணுபவர்களுக்கு, ஒரே ஒரு பதில்!
இறைவனை முழுமையாய் உணர்ந்து சரணாகதி அடையும் நிலையை சங்ககாலம் தொட்டே நாயன்மார்களும், ஆழ்வார்களும், அடியார்களும், ஆச்சார்யர்களும், புலவர்களும், பூரணமாக அனுபவித்து, இறைவனைப் பாடிப் பரவசமடைந்துள்ளனர்.
அவர்களின் அடியொற்றி, இறைவன் மீதுள்ள அளவிலா பக்தியால், அவரிடமே தம்மை ஒப்புவித்து, அவரின் அடிமையாய், “நான்” எனும் அகம் அழித்து, பக்தி செய்வதில் பகவானுடைய தாசராய், இறைவனையே, தம் தாயாய், தந்தையாய், குழந்தையாய், ஆசானாய், காதலனாய் உருவகப்படுத்தி, பக்தி செய்யும் பல அடியார்கள், வாழ்ந்து மறைந்த புண்ணிய பூமி இது!
நான், இவ்வளவு உயர்ந்தவர்களுக்கு இணையாக இல்லாவிடினும், அவர்களுடைய பாதம் பற்றி, இந்தப் பெரும் பக்தி சாகரத்தில், சிறு துளியாகவேனும் இருப்பதை எனை உணரச் செய்து... இறைசக்திகளைத் தம் உறவாய், தந்தையாய், தாயாய், மாமனாய், சகோதரனாய் ஏற்கும் மனப்பக்குவத்தையும் அளித்து... “நான் என்று எதுவுமில்லை தந்தையே! எல்லாமே நீயாகிறாய். நீ எது செய்தாலும் அது என் நன்மையின் பொருட்டே... எனக்கு வரும் சோதனைகளைக் கூட, மலை போல் வருவதைப் பனி போல் மாற்றியருளும் உங்கள் அற்புதத்தை நான் பல நேரங்களில் சாசுவதமாக உணர்ந்து பிரமித்து, பரவசமடைந்திருக்கிறேன்...! நன்றிப்பா! நன்றி மாமா!”
இறைவன்! விழிகளால் பார்க்க முடியாத, புலன்களால் உணர மட்டுமே முடிந்த அற்புதம் என்பதை, வாழ்வியல் நடைமுறையில், அனுதினமும் அனுபவபூர்வமாக அறிந்த ஒரு ஏழைக் குழந்தையாக இருப்பதில், என் மனம் சிலிர்த்து நிறைந்து போகிறது.
இந்நூல் எழுதுவதற்கு மிகவும் உதவியாக இருந்த, ‘பதினெண் புராணங்கள், ஸ்ரீமத் பாகவதம், இறைவன் அவதாரம் இருபத்து நான்கு, ஸ்ரீ வைணவம்... 108 திவ்ய தேசங்கள், பன்னிரு ஆழ்வார்களும் பிரபந்தங்களும், ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீ அனந்தபுராணம்...’ மற்றும் பல ஆன்மிகக் களஞ்சியங்களுக்கும், என் இதயபூர்வமான நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
இந்நூலை எழுதத் தூண்டிய என் அன்புத் தந்தையாகிய ஈசனுக்கும், எழுதும் போது பல வகையில் வழிகாட்டிய என் தாயுமானவராகிய ஸ்ரீ அனந்த பத்மநாபருக்கும், என் நன்றிகளையும், அன்பையும் சமர்ப்பித்து. இவ்வாய்ப்பை நல்கி... என்னைச் சிறு துரும்பாய்... ஒரு கருவியாய்... எழுதுகோலாய் பயன்படுத்தி, புனிதப்படுத்திய இரு பெரும் பிரபஞ்ச சக்திகளின் பாதார விந்தங்களுக்கு... இந்நூலைப் பணிவன்புடன் சமர்ப்பித்து மகிழ்கிறேன்!
என்றும் அன்புடன்,
– உமா பாலகுமார்
Release date
Ebook: December 23, 2019
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International