ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
எனது சமுதாய வாழ்க்கை அனுபவங்களை மூன்று கூறுகளாகப் பிரித்துக் கொண்டு நான் எழுத ஆரம்பித்ததின் முதற்கூறு அரசியல் அனுபவங்கள் என்ற தலைப்பிலும், இரண்டாவது கூறு கலை உலக அனுபவங்கள் என்ற தலைப்பிலும், மூன்றாவது கூறு பத்திரிகை உலக அனுபவங்கள் என்ற தலைப்பிலும் எழுதி வருகிறேன். இந்தப் புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவத்தின் முதற் பாகமே ஆகும்.
உதாரணமாக அரசியல் அனுபவங்கள் 1940 முதல் 1971 வரை உள்ள முப்பதாண்டுக் கால அரசியல் அனுபவ ரெக்கார்டு ஆகும். அதன் பின்னர் இதோ பல ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்தப் பல ஆண்டு அனுபவங்கள் இரண்டாவது பாகமாக எழுதுவதற்கு ஏராளமான சமகால நிகழ்வுகளைக் கருக்கொண்டிருக்கிறது. அது போலவே கலையுலக அனுபவங்கள் - 1945 முதல் 1975 வரையான எனது பரந்துபட்ட அனுபவங்களை முதற்பகுதியாகக் கொண்டு இந்நூல் வெளிவருகிறது.
இவ்வளவு சுவையான, இவ்வளவு திருப்பங்கள் நிறைந்த அனுபவங்களை அரசியல் உலகுபோல அடுத்துவரும் ஆண்டுகளில் நான் கலையுலகில் கண்டு எழுத முடியாது என்றே நம்புகிறேன். ஆயினும் அரசியல் எங்கேதான் இல்லை? அது எல்லாத் துறைகளிலும் ஒளிந்து நிற்பதனால், ஒரு சமுதாயக் கலைஞன் ஏதேதோ புறக்காரணங்களைச் சாக்காய்க் கொண்டு, ‘நான் அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொள்கிறேன்' என்று சொல்லிக் கலையுலகத்தில் போய் நிரந்தரமாகப் புகுந்து கொள்ள முடியாது.
அரசியல் உலகம் நாறிப்போய்க் கிடப்பதனால் - அங்கேயாவது அது திறந்த சாக்கடையாய் இருக்கிறது - கலையுலகில் ஒவ்வொருவர் மடியிலும், மனத்திலும், தலையிலும் அந்தச் சாக்கடை மிக மறைவாகக் கிருமிகளை உற்பத்தி செய்து நிலை பெற்றிருக்கிறது.
அரசியல் உலகில் நட்புக்கும், தோழமைக்கும் நமக்காக உயிர் கொடுக்கும் தியாக உள்ளங்களுக்கும் நிறைய இடமுண்டு. கலையுலகில் நட்பு என்பதோர் நாடகம். ஒவ்வொருவன் இளிப்பும் ஒரு மேக்கப். எவ்வளவு உன்னதமான படைப்புகளை இவர்கள் உருவாக்கினாலும் மிக மிகக் கேவலமான நிலையில் விழுந்து கிடக்கச் சபிக்கப்பட்டவர்கள் நம் காலக் கலைஞர்கள், குட்டம் பிடித்தவன் பட்டுச்சட்டை போட்டிருக்கிற மாதிரி சினிமாக் கலையுலக வாழ்க்கை.
எனவே ஒரு சமூக மாற்றத்திற்கு அர்ப்பணித்துக் கொள்ளாத கலையும், அரசியலும் சாக்கடையாய்த்தான் போகும். அந்தச் சமூக மாற்றத்தை அவாவி நிற்கிற ஒருவன், மாற்றமுறாத சமூகத்தில் போராடிக் கொண்டுதான் இருக்க வேண்டுமே தவிர ஒன்றும் சாதித்துவிட முடியாது. அப்படிச் சாதிப்பதாக நினைத்துக் கொள்வதெல்லாம் சிந்தனையும், உலக அறிவும் உடைய ஒருவனுக்குப் பொருந்தாது. மலர் மாலை அணிந்து கொள்கிறவனெல்லாம் மகா விஷ்ணு அல்ல. பெரும்பாலான கலைஞர்கள் இப்படி நினைத்துக் கொள்கிற விபத்துக்குப் பலியாகி விடுகிறார்கள். அந்த அர்த்தத்தில் பார்த்தால் நான் ஒரு கலைஞனே அல்ல.
ஒரு கலைஞன் என்பவன் சமூகத்தில் ஒடுக்கப்பட்டிருக்கும் பெண்மக்களை விடவும் நலிந்து கிடப்பவன். மாறாத சமூகத்தில் பெண்ணைவிடப் பரிதாபத்துக்குரிய ஜந்து கிடையாது. மாறிய சமூகத்தில் அவளைவிட மாபெரும் சக்தியும் இல்லை என்கிற அனுபவம் இந்த நூற்றாண்டில் மனித ஜாதிக்கு வந்திருக்கிறது. அதனால்தான் எழுதுகிறவன் கலைஞர்களில் சிறப்பானவன் என்று நான் கண்டு கொண்டேன். பிகாஸோவின் ஓவியங்களை விடவும், பீதோவனின் இசைக் கோலங்களை விடவும், ஹ்யூகோவின் ஒரு வாக்கியம், கதேயின் ஒரு கடைச் சொல் உலக மக்களை எல்லாம் ஆட்டிப் படைத்து விடும். இசை கேட்டாரை மட்டும் பிணிக்கும் இலக்கியம் கேளாதாரும் வேட்ப காலகாலத்துக்கும் நிலைக்கும்.
அது காரணம் பற்றியே இலக்கியம் தவிர வேறு கலைகளில் நான் கொள்ளுகிற ஈடுபாடு, காலத்தால் அல்லது விதிவசத்தால் நேர்ந்து விடுகிற ஒரு சொந்தம்தான் எனத் தோன்றுகிறது.
இந்தத் தலைப்பில் அரசியல் அனுபவங்கள் போல் இரண்டாவது பகுதி எழுத நேரும் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. ஒரு மாறிய சமூகத்திற்கே அது தேவைப்படும். அப்பொழுது அதனுடைய தொனியே வேறு விதமாய் அமையும். அப்படி ஒரு நூலை இதன் இரண்டாவது பாகமாய் நான் எழுத வேண்டும் என்ற அபிலாஷையோடு இந்த நூலை எனது வாசகர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்.
- த. ஜெயகாந்தன்
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 18 ธันวาคม 2562
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย