Step into an infinite world of stories
Fiction
அரசியல், கலாசாரம் பற்றிய என் விமர்சனக் கருத்துக்களைக் கடந்த முப்பதாண்டுகளில் வெவ்வேறு பத்திரிகைகளில் நான் வெளிப்படுத்தி வந்திருக்கிறேன் என்றாலும், ‘ஓ’ பக்கங்கள் வாசகர்களை சென்றடைந்ததைப் போல இது வரை வேறு எதுவும் சென்றடையவில்லை. இதற்குக் காரணம் ஆனந்த விகடன்தான். தமிழ்நாட்டின் மூலை முடுக்குகள் மட்டுமல்ல, உலகத்தின் பல பாகங்களிலும் இருக்கும் தமிழ் வாசகர்களிடமும் என் கருத்துக்களை சென்று சேர்ப்பித்திருக்கிறது விகடன்.
இந்த நல்வாய்ப்புக்கு முழு காரணமானவர்கள் மூவர். என் கருத்துக்களால் கலவரமடைந்த ஒரு சில அரசியல் பிரமுகர்களும் கலாசாரக் காவலர்களும் தங்கள் பதற்றத்தை வெளிப்படுத்தியபோதும், அவற்றால் சலனமடையாமல் ஜனநாயகத்தின் பன்முகத் தன்மையில் தனக்குள்ள உறுதியுடன் எனக்குத் தொடர்ந்து விகடனில் இடம் அளித்துவரும் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், கருத்துக்கள் சர்ச்சைக்குரியனவாக இருந்தாலும் வெளிப்படுத்தும் முறை பொது நாகரீகத்துக்கு உட்பட்டிருக்கிறதா என்பதை மட்டுமே கவனிக்கும் ஆசிரியர் அசோகன், பொழுதுபோக்கு அம்சங்களில் மட்டுமன்றி சமூக விமர்சனப் பணியை எப்படிச் செய்கிறது என்பதில்தான் இதழியலின் மரியாதையே அடங்கியிருக்கிறது என்று ஆழமான நம்பிக்கை வைத்திருக்கும் நிர்வாக ஆசிரியர் இரா.கண்ணன் ஆகிய அந்த மூவருக்கும் என் நன்றி என்றும் உரியது.
தொலைபேசி, கடிதங்கள் வாயிலாக என்னுடன் ‘ஓ’ பக்கங்களைத் தொடர்ந்து விவாதிக்கும், எனக்கு முகம் தெரியாத வாசகர்களுக்கும், தெருவிலும் டீக்கடைகளிலும் ஓட்டல்களிலும் என்னைப் பார்த்த உடன் உரிமையுடன் நிறுத்தி அந்த வாரக் கட்டுரையை அலசும் வாசகர்களுக்கும் நன்றி. உங்கள் அக்கறைதான் என்னைத் தொடர்ந்து இயங்கவைக்கிறது.
வாசகர்களிடமிருந்து வரும் ஆக்கபூர்வமான விமர்சனமும், உற்சாகமான ஆமோதிப்பும் மட்டும் இல்லையென்றால் தமிழ்ச் சூழலில் என்னைப் போன்ற கட்டுரையாளன் சீக்கிரமே நொந்து நூலாகிக் காணாமற்போய்விடுவான்.
ஏனென்றால் இங்கே அரசியல் என்பது ஒரு பிரச்னையில் இருவேறு அல்லது பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்படும் களமாக இல்லை. அந்தத் தலைவர் கருத்தைச் சரியென்று சொன்னால் நீ இந்தத் தலைவரின் எதிரி, இவர் கருத்தை ஆதரித்தால், நீ அவருடைய எதிரி. இரண்டில் ஒரு பக்கம்தான் இருக்க முடியும்; இருக்க வேண்டும். வேறு எதுவாக இருந்தாலும் உனக்கு முத்திரை குத்தி உள் நோக்கம் கற்பிப்போம் என்று அருவெறுக்கத்தக்க அரசியல் இங்கே நடத்தப்படுகிறது.
கலாசாரத் துறையின் போலித்தனங்களோ பட்டியலிட்டுத் தீராது. இந்தியாவிலேயே எய்ட்ஸ் நோயில் முதலிடத்தில் இருந்தாலும், செக்ஸ் பற்றி இளைஞர்களுடன் விவாதிப்பது கெட்ட காரியமாகத் திட்டப்படும். கிளுகிளுப்பூட்டி காசு சம்பாதிக்க செக்ஸை பயன்படுத்தலாம். ஆனால் அறிவூட்டக் கூடாது.
எல்லாவற்றையும் விட மேன்மையானது என்று நம்பப்படுகிற ஆன்மிகத் துறை போலித்தனங்களில் இதர துறைகளுக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல. எத்தனை போலி சாமியார்களும் குருமார்களும் அம்பலப்பட்டாலும், மதங்களும் அவற்றின் நடைமுறைகளும் மேலெழுந்தவாரியாகக் கூட விமர்சிக்கப் படுவதில்லை. சிறு முணுமுணுப்புகள் கூட பெரும் கண்டனங்களாகக் காட்டப்படும்.
இப்படிப்பட்ட சூழலில் மக்கள் சார்பும் மனித நேயமும் உடையவர்கள் கறாராக இருந்தால்தான் சமூகத்தில் ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்படமுடியும். கறாராக இருப்பதை முரட்டுத்தனம் என்று சித்திரித்து திசை திருப்புவதும் ஒரு சதிதான்.
இவன் கறாரானவனே தவிர முரடன் அல்ல என்று உணர்ந்து தொடர்ந்து என்னிடம் அன்பு காட்டி வரும் விகடனுக்கும் வாசகர்களுக்கும் நன்றி. சமூகத்துக்கு நான் பட்டிருக்கும் நன்றிக் கடனாகவே என் எல்லா எழுத்தையும் கருதுகிறேன்.
சென்னை , ஜனவரி 2007.
- ஞாநி
Release date
Ebook: 30 September 2020
English
India