Step into an infinite world of stories
Fantasy & SciFi
அஞ்சலி பி.காம் முடித்ததும் தெரிந்த கம்பெனியில் சொல்லி சித்தப்பா வெங்கட்தான் வேலை வாங்கித் தந்தார்! எடுத்த எடுப்பில் பதினைந்தாயிரம் சம்பளம்! பத்துமணி முதல் ஆறு மணி வரை! அஞ்சலி குஷியாகி விட்டாள். இங்கே அம்மா மல்லிகா வாயைப் பிளந்து விட்டாள்! “இதப்பாருடி! சாரதி சம்பளத்தை எடுத்து குடும்பச் செலவை நடத்திட்டு, உன் சம்பளத்துல சீட்டு கட்டி, நகை - துணி எல்லாம் வாங்கிடலாம்! புரியுதா?” அஞ்சலி பதிலே சொல்லவில்லை! முதல் மாச சம்பளம் வந்ததுமே பத்தாயிரம் ரூபாய்க்கு அவளுக்கு ட்ரஸ், மேக்கப் சாதனங்கள் - செருப்புகள் என வாங்கிக் குவித்தாள். இரண்டு பெரிய பைகளோடு வந்தாள். “என்னடீ இது அக்ரமம்? ஏண்டீ இப்பிடி செலவழிச்சே?” “படிக்கற காலம் வரைக்கும் யூனிஃபார்ம் தவிர, ரெண்டே ரெண்டு செட் ட்ரஸ்! அதுவும் மகா மட்டம். விதம்விதமா மத்தவங்க உடுத்தறதைப் பார்த்து நான் பட்ட அவமானம் எனக்குத்தான் தெரியும். உன் புருஷன் என்ன கிழிச்சார்?” “ஏண்டீ இப்பிடி பேசற? அவர் உனக்கு அப்பா!” “ஆமாம்! ஒரு பொம்பளையை கர்ப்பமாக்கிட்டா, அந்த ஆளுக்குப் பேரு அப்பாவா? அதுக்கு தனி சாமர்த்தியம் வேணுமா?”“அறைஞ்சேன்னா பாரு! ஒரு அம்மாகிட்ட பேசற பேச்சாடீ இது?” “நீ ஒரு நல்ல அம்மாவா எப்ப நடந்திருக்கே? வாய்க்கு ருசியா சமைச்சுப் போட்டிருக்கியா? பொங்கி வச்சிடுவே, கடமைக்கு! அதை நாங்களும் தின்னு தொலைக்கணும்!” “ஏண்டீ இப்பிடி பேசற? நான் என்னடீ செய்வேன்? உங்கப்பா தர்றதை வச்சுத்தானே நான் குடும்பம் நடத்த முடியும்?” “நீ கேட்டு வாங்கணும்! ரெண்டு புள்ளைகளை ஆளாக்கணும்னு சொல்லி, அந்த ஆள் சட்டையை புடிச்சிருக்கணும். போராடி குடித்தனம் செஞ்சிருக்கணும். உனக்கு ரெண்டு வேளை சோறு கிடைச்சா போதும்னு கம்முனு இருந்துட்டே!” “இது நியாயமாடீ?” “இதப்பாரு! நீயோ, உன் புருஷனோ எங்களை ஆளாக்கலை! அப்புறம் கேள்வி கேக்க மட்டும் யோக்யதை இருக்கா! கம்முனு இரு!” “சர்டீ! பத்தாயிரம் ரூபாய்க்கு உனக்கு வாங்கிட்டே! மீதி அஞ்சாயிரம் எங்கே?” “எனக்கு கைச் செலவுக்கு வேண்டாமா! சாரதி சம்பாதிக்கறானில்லை? கேட்டு வாங்கு!” “உங்கப்பனும் ஒழுங்கா குடும்பம் நடத்தலை! நீங்க ரெண்டு பேரும் ஆளானதும் ஆனந்தப்பட்டேன். இப்ப உங்ககிட்ட பிச்சை எடுக்க வேண்டியிருக்கு. என் தலையெழுத்து!” சாரதி உள்ளே வந்தான்! “என்ன சொல்றானு கேட்டியாடா?” “இதப்பாரம்மா! இந்த வீட்டுக்கு வேண்டிய பொருட்களை வாங்கிப் போட்டு, வீட்டு நிர்வாகத்துக்கும் நான் பணம் குடுத்துர்றேன்!” “எங்கே தர்ற! மளிகை, பால், காய் எல்லாத்துக்கும் கணக்குப் போட்டுத் தர்றே! என் கைல சல்லிக்காசு இல்லையே?எதுக்கு? குடும்பம் நடக்குதா இல்லையா?” “உங்கப்பா தர்றது கொஞ்சமா இருந்தாலும் அதை என் கைல தந்துட்டுப் போவார்!” “அவர் டூர்ல இருக்கார்! வேற வழியில்லை! நான் உள்ளூர்லதானே இருக்கேன்! இதப்பாரு! தேவைகள் நிறைவேறுதா இல்லையா? உன் கைக்கு எதுக்குக் காசு? தாறுமாறா செலவழிக்க நான் விடமாட்டேன்!” சாரதியின் ஸ்டைல் இது! மளிகை சாமான்கள், பால், காய்கறிகள் போன்ற பொருட்களுக்கு கணக்குக் கேட்டு எண்ணி எண்ணித்தான் தருவான்! பத்துரூபாய் குறையுமே ஒழிய கூடாது! மல்லிகா நொந்து போனாள்! சாரதிக்கு இந்த ரெண்டு வருடங்களில் சம்பளம் கூடி விட்டது! அடிக்கடி வெளிநாட்டுக்குப் போவது.. உள்ளூர் ப்ரொஜக்ட் என நன்றாக உழைத்ததால, சம்பளம் அறுபதாயிரத்தைத் கடந்து விட்டது! ஆனால் அதை வீட்டில் சொல்லவில்லை! “ஏண்டா! உன் கூடப்படிச்சவங்க சம்பளம் நிறைய உயரும் போது உனக்கு மட்டும் அதே சம்பளமா?” மல்லிகா விடவில்லை! கிளறினாள். “என் தகுதிக்கு இதுதான் கிடைக்கும்!” வாயடைத்து விடுவான்! ஆனால் வீட்டுக்குத் தரும் பணம் போக, சேமிக்கத் தொடங்கி விட்டான். மூன்று வருடங்கள் ஓடி விட, சேமிப்பில் பன்னண்டு லட்சம் சேர்ந்து விட்டது! அஞ்சலிக்கு வரன் பார்க்க வேண்டும் என்று மல்லிகா ஆரம்பித்து விட்டாள்
© 2024 Pocket Books (Ebook): 6610000511006
Release date
Ebook: 16 January 2024
English
India