அன்புக்குரிய வாசக நெஞ்சங்களே!
வணக்கம்.
இப்போது உங்களுடைய கைகளில் இடம்பிடித்து இருக்கும் ஒரு பச்சை நிற எச்சரிக்கை - சிறுகதைத் தொகுப்பைப் படித்து முடித்ததும் உங்களுடைய இதயங்களிலும் இடம் பிடிக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. என் ஐம்பத்திமூன்று ஆண்டுகால எழுத்துலக வாழ்க்கையில் 2000-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கிட்டத்தட்ட தமிழகத்தின் எல்லா வார, மாத, தின இதழ்களிலும் வெளிவந்து என்னுடைய எழுத்துப் பசியை தணிய வைத்தன.
மலர்கள் உதிரிகளாக இருப்பதைக் காட்டிலும் மாலையாய் மாறி இருக்கும்போதுதான் அவைகளின் அழகு பன்மடங்காகத் தெரியும். பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பதிப்பகத்தாரால் என் சிறுகதை மலர்கள் மாலைகளாய் வெளிவந்து வாசகர்களை மகிழ வைத்தது. இந்த புத்தகத்தில் 16 சிறுகதைகளும் என்னால் கவனமாகப் படிக்கப்பட்டு தேர்ந்து எடுக்கப்பட்டவை. வெகுஜன இலக்கியம் என்ற பிரிவில் சிறுகதைகள் எழுதப்பட்டிருந்தாலும், கதையைப் படித்து முடிக்கும்போது அதன் இறுதி வரிகளில் ஒரு பயனுள்ள செய்தியை இந்த சமூகத்துக்கு சொல்பவையாகவே சித்தரிக்கப்பட்டு இருப்பதை படிக்கும் வாசகர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.
மிக்க அன்புடன்
ராஜேஷ்குமார்
Release date
Ebook: 7 July 2023