Step into an infinite world of stories
Fantasy & SciFi
ஹலோ பெரியப்பா, எப்படி இருக்கீங்க?” “என்னம்மா, கல்யாண பொண்ணு... நீ எப்படி இருக்கே?” “நல்லா இருக்கேன் பெரியப்பா. நேத்து தான் பத்திரிகை வந்துச்சு. நாளைக்கு உங்களுக்கு இ-மெயிலில் அனுப்பி வைக்கிறேன்.” “ரொம்ப சந்தோஷமாக இருக்கு மது. இதையெல்லாம் பார்க்க உங்க பெரியம்மா கொடுத்து வைக்கலை. உன் மேல் அலாதி பிரியம். சரி, சரி... நல்ல விஷயம் பேசும் போது, மனசு வருத்தப்படற விஷயங்களை நினைக்கக் கூடாது. உன் அப்பா எங்கே? வீட்டில்தான் இருக்கானா?” “இதோ ஒரு நிமிஷம். கூப்பிடறேன் பெரியப்பா... அப்பா அமெரிக்காவிலிருந்து பெரியப்பா பேசறாரு.” “அண்ணா, நல்லா இருக்கீங்களா. கல்யாணவேலை நடந்துட்டிருக்கு. கல்யாணத்துக்கு இன்னும் இரண்டு மாசம் தான் இருக்கு. நீங்களும் கல்யாணத்தில் கலந்துகிட்டா நல்லா இருக்கும். கடல் கடந்து இருக்கீங்க. குடும்பத்துக்கு மூத்தவர், உங்க ஆசியோடு மதுமிதா கல்யாணம் நடக்கணும். உங்களால வரமுடியுமா அண்ணா?” “எதுக்கு பரமு, தயக்கம்? நான் வரணும்... அவ்வளவுதானே? நான் இந்தியா வரப்போறேன் பரமு. அதை சொல்லத்தான் கூப்பிட்டேன். இந்தியா வந்து - இந்த முறை ஒரு மாதத்தில் திரும்பப் போறதில்லை. உங்களோடு ஆறுமாசம் தங்கிட்டு போகலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். செப். 10-ம் தேதி கிளம்பறேன். மதுமிதா கல்யாணம் என் முன்னிலையில் சிறப்பாக நடக்கும். சந்தோஷம் தானே!”ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா. நீங்க வருவீங்கன்னு நான் கனவிலும் நினைக்கலை. எங்களோடு ஆறு மாதம் இருக்கேன்னு சொன்னது மனசுக்கு நிறைவா இருக்கு. நீங்க இந்தியாவில் இருக்கும் போது சேர்ந்திருந்த நாட்கள்தான் ஞாபகம் வருது.” அவர் குரலில் உண்மையான அன்பும், பாசமும் தெரிந்தது. “எங்க அண்ணன், நம்ப மதுமிதா கல்யாணத்தில் கலந்துக்க, அமெரிக்காவிலிருந்து வர்றாரு. இந்தியாவில் ஆறுமாதம் தங்கப் போறதாக சொன்னாரு.” சந்தோஷ குரலில் சொல்லும் கணவனை பார்த்தாள் சரோஜா. “ம், அவருக்கென்ன தனி மனுஷன். உங்க அண்ணி இறந்து ஒரு வருடமாச்சு. மகனும், மகளும் அமெரிக்காவில் வாழ்ந்ததிலே, அந்த ஊர் பிரஜை மாதிரி, அந்த நாட்டுக் காரங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அமெரிக்க மருமகன், மருமகள். இவரை யார் திரும்பிப் பார்க்கப் போறா... அதான், தனியா பொழுதை ஓட்ட முடியாம... ஆறுமாசம் இந்த பக்கம் வரலாம்னு முடிவு பண்ணியிருப்பாரு.” “எப்படியோ, அவர் வாழற வாழ்க்கை நமக்கு எப்படி தெரியும்! வரணும்னு பிரியப்பட்டு வர்றாரு. வந்து சந்தோஷமா இருந்துட்டு போகட்டும். நாங்க மூணு பேர். ஒண்ணா ஒரு தாய் வயிற்றில் பிறந்தோம். இப்ப ஆளுக்கொரு திசையில் இருக்கோம். அண்ணன் அந்தக் காலத்திலிருந்தே குணம் மாறாமல் அதே பிரியம், பாசத்தோடு இருக்காரு. என் தங்கச்சி தான் உள்ளூரில் இருந்தும், இப்படி பேச்சு வார்த்தை இல்லாமலே போயிடுச்சி.” “இங்கே பாருங்க. இப்ப எதுக்கு உங்க தங்கச்சி பேச்சை எடுக்குறீங்க? அவளை, மனசிலிருந்து என்னைக்கோ தூக்கியெறிஞ்சாச்சு. சந்தோஷமான இந்த நேரத்தில் அவ பேச்சு வேண்டாம்.” பரமுவின் மனதில் - ஐந்து வருடமாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருக்கும் - அவர் தங்கை சுமித்ரா வந்து போகிறாள். “அப்பா, வாங்க சாப்பிடலாம். நேரமாச்சு.” மகள் அழைக்க, தங்கையின் நினைவுகளை ஒதுக்கி வைத்தவராக எழுந்து கொள்கிறார்.
© 2024 Pocket Books (Ebook): 6610000531226
Release date
Ebook: 12 February 2024
English
India