Fiction
‘பகையாளியை உறவாடிக் கெடு’ என்று ஒரு முதுமொழி உண்டு. இன்றைக்குப் ‘பங்காளியைக் கூட உறவாடிக் கெடு’ என்று புதுமொழி உண்டாக்கும் அளவுக்கு உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது உளவு! நாடுகளுக்கு இடையே என்றில்லை... பெரும் நிறுவனங்களுக்கு இடையேயும் பெரிய பிரச்னையாக உருவெடுத்து நிற்கிறது உளவு!
‘அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு நாட்டின் மூவரில் ஒருவர் வேறு ஒரு நாட்டின் அல்லது வேறு நாட்டு நிறுவனத்தின் உளவாளியாக இருப்பார்’ என்று சர்வதேச அறிக்கை ஒன்று அலறுகிறது. அப்படி உளவாளியாக இருப்பது அவருக்கே தெரியாது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் தலை சீவப்பட்டார், நம் ஆந்திராவைச் சேர்ந்த இன்ஜினீயர் சூர்ய நாராயணா. அவர் செய்த குற்றம் என்ன...’ அமெரிக்காவுக்காக எங்களை உளவு பார்த்தார்’ என்று சொல்கிறார்கள், தலிபான் தீவிரவாதிகள். சூர்யநாராயணா உளவு பார்த்தார் என்பது நிரூபிக்கப்படவில்லை. ஆனால் உலகெங்கும் அப்பாவிகள் பலர் அவர்களுக்கே தெரியாமல் இப்படி உளவு வேலைகளில் இறக்கி விடப்பட்டுள்ளனர் என்பது மட்டும் உண்மை!
ஒரு நாட்டை அபகரிக்க அல்லது ஆக்கிரமிக்க யுத்தம் ஒன்றே வழி என்பது பழைய கோட்பாடாகி விட்டது. கடந்த கால சரித்திரங்களில் வேண்டுமானால் யுத்தத்தின் பங்கு இன்றியமையாததாக இருக்கலாம். எதிர்கால சரித்திரத்தில் யுத்தத்தின் பங்களிப்புக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவுதான்.
இதை வைத்து, உலகின் வலிமை மிக்க நாடுகள் எல்லாம் சைவமாகி விட்டன என்று அர்த்தம் செய்து கொள்ளக் கூடாது. முந்தைய காலங்களைப் போல நோஞ்சான் நாடுகளைப் பிடிக்கும் ஆசை இல்லா விட்டாலும், அவற்றை அடிமைகளாக ஆட்டிப் படைக்கும் பேராசை எல்லா வலிய நாடுகளிடமும் இன்றைக்கும் இருக்கவே செய்கிறது. அந்த வகையில் அவை ருத்ராட்சப் பூனைகளாகத்தான் நாக்கைத் தொங்க விட்டுக் காத்திருக்கின்றன. ஆனால், தங்கள் ஆசையை அவை பூர்த்தி செய்து கொள்ள யத்தத்தை நம்பவில்லை. யுத்தத்துக்கு நிகரான, ஆனால் பேரழிவை உண்டாக்காத, மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கின்றன. அந்த மாற்றுப் பாதைதான் உளவு!
இனி உளவுதான் உலகம். ஒற்றர்கள்தான் அதன் உண்மையான தலைவர்கள். தன் எதிரியின் ரகசியங்களைத் தெரிந்துகொண்டு அவனை முன்கூட்டியே செயலிழக்கச் செய்கிற அரசும், நிறுவனங்களும் தான் இனி உலகை சர்வாதிகாரம் செய்யப் போகின்றன. ஒரு நாட்டை எதிரி யிடமிருந்து காக்க மட்டுமே முன்பு உளவு பயன்பட்டது. அந்த உளவாளிகள் வெளிச்சத்துக்கு வராத தேசத் தியாகிகளாகக் கருதப்பட்டார்கள். ஆனால், இனி காட்டிக் கொடுக்கத் தயாராக இருக்கிற எல்லாருக்குமே உளவு என்பது ஓர் அற்புதத் தொழில். முன்பு உளவு என்பது ஒரு அரசாங்கத்தின் சார்பான ரகசிய வேலை. இப்போது அதுவும் தனியார் மயமாக்கப்பட்டுவிட்ட து!
உங்கள் அலுவலகத்தில்... உங்கள் பயணத்தில்... இப்படி எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே ஓர் உளவாளி நிச்சயமாக இருக்கக்கூடும், உஷார்!
சுதாங்கன்
Release date
Ebook: 18 May 2020