இது ஒரு விந்தைதான். கடந்த 43 நாட்களாக முகநூல் நண்பர்களுடன், வாசகர்களுடன் மட்டுமே உறவாடிக்கொண்டிருக்கிறேன். பிற்பகல் துவங்கி இரவு ஏழு மணி வரையில் அலுவலக பணிகள் செய்தாலும், எனது புதினங்களை எழுதும் பணிகளை அப்பால் ஒதுக்கிவிட்டு, முகநூலில் தொடர்களை எழுதிக்கொண்டிருக்கிறேன். அலைபேசி மூலமாக, மெஸ்சன்ஜர் மூலமாக, வாட்ஸாப் மூலமாக எனது தொடர்களுக்கு வரும் பாராட்டுகளை, கண்டு மலைத்து போகிறேன்.
சர்ச்சைகளுக்கும், மற்றவர்களை திட்டுவதற்கும் மட்டுமே, ஒரு தளமாக மாறிவரும் முகநூலில் , தொன்மையான, நுட்பமான, சுவையான தகவல்களை மட்டுமே பரிமாறிக்கொள்ள முடியும் என்பதை உணர்ந்தவனாக, எனது ஆறாவது தொடரை துவங்குகிறேன்.
சில நேரங்களில் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட வேண்டி இருக்கும். அமாவாசைக்கு அப்துல் காதர் கடையில் கூட வாழைக்காய் வாங்க வேண்டி இருக்கும். அம்மாதிரி, ''சிவந்த மண்'' சினிமாவுக்கு வித்திட்டது, சாத்தி என்கிற இந்திபடம். ''சாத்தி'' படத்தை ஈன்றது, நமது ஏ பீம்சிங்கின் படமான பாலும் பழமும்தான். சிவந்த மண் கதைக்கு வித்திட்டது, பாலும் பழமும் படத்தில் இடம்பெற்ற, ''நான் பேச நினைப்பதெல்லாம், நீ பேச வேண்டும்'' பாட்டுதான் என்றால் நம்புவீர்களா ?
நீங்கள் பேச நினைப்பதைத்தான் நான் முகநூலில் பேசி வருவதால், ''நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்'' பாட்டில் இருந்துதான் அந்நிய மண்ணில் சிவந்த மண் கதையை துவக்குகிறேன் .
Release date
Ebook: 2 June 2020