Step into an infinite world of stories
4.7
Biographies
1985ம் வருடம் டிசம்பர் மாதம் திரு. கோபால், திரு. ஜி. டி. நாயுடுவின் புதல்வர், என்னை முதன்முறையாகச் சந்தித்தார்.
“என் தந்தையின் வாழ்க்கைச் சரித்திரத்தை நீங்கள் எழுதி புத்தகமாக வெளியிட வேண்டும் என்பது என் விருப்பம். ஒப்புக் கொள்வீர்களா?”
எந்தப் பீடிகையும் இல்லாமல், சுற்றி வளைக்காமல் நேரடியாக திரு. கோபால் விஷயத்துக்கு வந்துவிட, புருவங்கள் முடிச்சுப்போட சில நிமிடங்களுக்கு யோசித்தேன், பிறகு கேட்டேன்.
“நாயுடு பற்றி எக்கச்சக்க புத்தகங்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளன. அவரை ஒருதரம்கூடச் சந்தித்திராத என்னால் கூறுவது சாத்தியம் என்று நம்புகிறீர்களா?
துளி தயக்கமின்றி திரு. கோபாலிடமிருந்து பதில் வெளிப்பட்டது. “என் தந்தைக்கு 'அதிசய மனிதர்', 'படிக்காத விஞ்ஞானி', 'விவசாய விஞ்ஞானி', 'தொழில் விஞ்ஞானி', 'படிக்காத மேதை' என்று எத்தனையோ பட்டப் பெயர்கள் உண்டு. என்னைப் பொறுத்தவரையில் பல பிளஸ் பாயிண்ட், சில மைனஸ் பாயிண்ட்களைக் கொண்ட ஒரு அற்புத மனிதராகத்தான் என்றைக்குமே அவரை நான் உணர்ந்திருக்கிறேன்.
அப்பா சம்பந்தப்பட்ட கோப்புகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அந்தக் கோப்புகளைப் படித்து அவருடைய நண்பர்கள், உறவினர்களைச் சந்தித்து விவரங்களைச் சேர்க்க முடிந்தால், அப்பாவை இன்னமும் முழுமையாக அறிந்து கொள்ள முடியும்; அவருடைய நடவடிக்கை, சிந்தனைகளை இன்னும் பூர்ணமாகப் புரிந்து கொள்ள முடியும் என்று தோன்றியது.
இதை யார் மூலம் நிறைவேற்றினால் சிறப்பாக இருக்கும் என்று யோசித்தபோது, மனதில் வந்து நின்றவர்களில் முக்கியமானவர் நீங்கள். எளிமையாக, அதே சமயத்தில் மனசில் பதியும்படியாக எழுதுவது உங்களுக்குக் கைவந்த வித்தை. அப்பாவை வைத்து இதுநாள்வரை மற்றவர் எழுதிய புத்தகங்களிலிருந்து கட்டாயம் மாறுபட்டு உங்களால் எழுத முடியும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை...
தவிர அப்பாவைப் புரிந்து கொள்வதும் அவருடைய கருத்துக்களை ஏற்று நடக்க முயற்சிப்பதும், சரியான வழிகாட்டி இன்றித் தவிக்கும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஓரளவுக்கு உதவியாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன்.
திரு. கோபால் கூறிய கடைசிக் காரணம் என் மனதில் சின்னதாக ஒரு நீரூற்றைக் கிளப்ப, அடுத்து வந்த நாட்களில் இது சம்பந்தமாய் யோசனை செய்து விட்டு கோயம்புத்தூருக்குச் சென்றேன்.
திரு. கோபாலின் மனைவி சந்திரா, பெண் சாந்தினி, மருமகன் வெங்கட், பிள்ளை ராஜ்குமாரைச் சந்தித்தேன், புகழ்மிக்க கோபால் பாகை, சிந்தனை மாறாமல் சுற்றி வந்தேன். எதிரே இருந்த பிரெஸிடெண்ட் ஹாலில் உள்ள பிரம்மாண்டமான கூடத்தில் திரு. நாயுடுவைப்பற்றி குறிப்புகள் கொண்ட, அம்பாரமாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஃபைல்களை மேலோட்டமாகப் பார்வையிட்டேன். அவர் கையாண்ட, கண்டுபிடித்த நூற்றுக் கணக்கான சாதனங்களை, மியூஸியத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருந்தவற்றைப் பார்த்தேன்.
பார்க்கப் பார்க்க, திரு. நாயுடு அவர்கள் தனக்குள் பல முகங்களை அடக்கிக்கொண்ட வெகு சுவாரஸ்யமான மனிதர் என்பதைத் புரிந்துகொள்ள முடிய, புத்தகம் எழுதச் சம்மதித்தேன்.
மூன்று ஆண்டுகளில் இந்தப் புத்தகம் சம்பந்தமாய், மதிப்புக்கும் அன்புக்கும் உரிய ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் அவர்களிலிருந்து, மூப்பு காரணமாய் வேலையிலிருந்து நின்றுவிட்ட சாதாரண சமையற்காரர் வரை பலரைப் பேட்டி கண்டு, பல ஊர்களுக்குச் சென்று, திரு. நாயுடு லைப்ரரியில் இருந்த அவர் மேற்பார்வையில் பைண்ட் செய்யப்பட்ட அவரைப் பற்றின புத்தகங்களைப் படித்து, தேவையான விஷயங்களைச் சேகரித்துக் கொண்டபின், அவற்றைத் தொகுத்து எழுத உட்கார்ந்த பிறகே, முதல் முறையாய் எனக்குள் பயம் முளைவிட்டது.
பாடுபட்டு விவரங்களைச் சேகரித்து விட்டோம், சரி… ஆனால் இவற்றை வித்தியாசமாக எப்படித் தொகுப்பது? நின்று, நிதானமாய் யோசிக்கையில் ஒரே ஒரு வழி மூலம்தான் இந்தப் புத்தகத்தை வித்தியாசமாக எழுத முடியும் என்பது விளங்க, என் கருத்தை அடுத்தமுறை திரு. கோபாலைச் சந்தித்தபோது வெளிப்படுத்த, அவர் தீவிரமாய் ஆட்சேபித்தார்.
அவர் விரும்பிய ரீதியில் 'அப்பா' வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை திரு. ஜி. டி. நாயுடு பற்றினதாகவே இருக்கும். அவரை நான் சந்தித்திராத நிலையில் விவரங்களுக்கு அழுத்தம் கொடுக்கவே (Authenticity) திரு. கோபால் மூலம் கூற வைக்கும் முயற்சி என்பதை விடாப்பிடியாகச் சொல்லி எப்படியோ திரு. கோபாலைச் சம்மதிக்க வைத்தேன்.
திரு. நாயுடு ஓர் ஆழ்கடல். ஒவ்வொரு தரம் மூழ்கி வெளிப்பட்டபோதும் முத்துக்களும், பழங்களுமாய் விவரங்கள் என் கையில் சிக்கியது நிஜம். அந்தப் பெரிய பொக்கிஷங்களை எனக்குத் தெரிந்த வகையில் ஓர் அழகான, அதே சமயம் வெகுவாக உபயோகிக்கக்கூடிய மாலையாக நான் தொகுக்க முயற்சித்ததின் விளைவுதான் இந்தப் புத்தகம்.
- சிவசங்கரி
Release date
Ebook: 23 December 2019
English
India