Step into an infinite world of stories
Fiction
‘ஓ!’ பக்கங்களுக்கு ஆனந்த விகடன் வாசகர்களிடம் கிடைத்து வரும் ஆதரவு எனக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் ஆச்சரியமாக இல்லை.
ஏனென்றால் இப்படிப்பட்ட ஒரு பகுதிக்கான தேவை எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. அந்தத் தேவை பூர்த்தி செய்யப்படும் போது வாசகர்கள் ஆதரவைக் காட்டுவது இயல்பானதுதான்.
‘ஓ!’ பக்கங்களின் வெற்றியின் ஆதாரம், சாதாரண மனிதர்களின் மனசாட்சியாக அது செயல்பட முயற்சிப்பதேயாகும். அன்றாடம் தங்கள் குடும்பத்துக்குள்ளும், வெளி உலகத்திலும் நடக்கும் சின்ன விஷயங்கள் முதல் பெரிய விவகாரங்கள் வரை ஒவ்வொன்றைப் பற்றியும் ஒரு கருத்து எல்லாருக்கும் இருக்கிறது. அந்தக் கருத்துதான் திரண்டு கலாசாரமாகவும், அரசியலாகவும் சமூகத்தில் பிரதிபலிக்கிறது.
சமூகத்தின் அரசியலிலும் கலாசாரத்திலும் நம் கருத்து எந்த அளவு கலந்திருக்கிறது என்றும், எந்த அளவு சரியானது என்றும் தெரிந்துகொள்ளும் ஆவல் நம் எல்லாருக்கும் இருக்கிறது. அதே சமயம் நம் கருத்தை ஏற்கனவே சமூகத்தில் இருக்கும் கலாசாரமும் அரசியலும் பாதித்துக்கொண்டே இருக்கின்றன என்பதையும் நாம் உணரவேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால் ஒவ்வொரு தனி நபரும் சமூகத்தை பாதிக்கிறார். ஒவ்வொரு தனி நபரையும் சமூகம் பாதிக்கிறது. இந்த உறவு ஆரோக்கியமானதாக இருக்கும்போதுதான் தனி நபரும் மகிழ்ச்சியாக இருப்பார். சமூகமும் நலமாக இருக்கும். அப்படி இருக்க விடாமல் தடுக்கும் சக்திகள் அரசியலிலும் கலாசாரத்திலும் எப்போதும் இருந்துகொண்டே இருக்கின்றன. அதை அடையாளம் காட்டுவதும், ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் முழுமையான பார்வையிலிருந்துதான் நாம் கருத்துக்கு வரவேண்டும் என்று சுட்டிக்காட்டிக்கொண்டே இருப்பதும், நம் கருத்துக்களைக் கால மாற்றத்துக்கேற்ப நாமே சுயவிமர்சனமும் மறுபரிசீலனையும் செய்யத் தூண்டுவதும்தான் ஒரு விமர்சகனான என் வேலை.
இதைச் செய்ய நமது பத்திரிகைகளில், மீடியாவில் பொதுவாகக் கணிசமான இடம் இருப்பதில்லை. கிடைக்கும் இடத்தில் எல்லாம் இதைச் செய்து வருவதை என் தொழில் தர்மமாக நான் கருதுகிறேன்.
அரசியல், கலாசாரம் பற்றிய என் விமர்சனக் கருத்துக்களை கடந்த முப்பதாண்டுகளில் வெவ்வேறு பத்திரிகைகளில் நான் வெளிப்படுத்தி வந்திருக்கிறேன் என்றாலும், ‘ஓ!’ பக்கங்கள் வாசகர்களை சென்றடைந்ததைப் போல இதுவரை வேறு எதுவும் சென்றடையவில்லை. இதற்குக் காரணம் ஆனந்த விகடன்தான். தமிழ்நாட்டின் மூலை முடுக்குகள் மட்டுமல்ல, உலகத்தின் பல பாகங்களிலும் இருக்கும் தமிழ் வாசகர்களிடமும் என் கருத்துக்களை சென்று சேர்ப்பித்திருக்கிறது விகடன்.
இந்த நல்வாய்ப்புக்கு முழு காரணமானவர்கள் மூவர். என் கருத்துக்களால் கலவரமடைந்த ஒரு சில அரசியல் பிரமுகர்களும் கலாசாரக் காவலர்களும் தங்கள் பதற்றத்தை வெளிப்படுத்தியபோதும், அவற்றால் சலனமடையாமல் ஜனநாயகத்தின் பன்முகத் தன்மையில் தனக்குள்ள உறுதியுடன் எனக்குத் தொடர்ந்து விகடனில் இடம் அளித்துவரும் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், கருத்துக்கள் சர்ச்சைக்குரியனவாக இருந்தாலும் வெளிப்படுத்தும் முறை பொது நாகரீகத்துக்கு உட்பட்டிருக்கிறதா என்பதை மட்டுமே கவனிக்கும் ஆசிரியர் அசோகன், பொழுதுபோக்கு அம்சங்களில் மட்டுமன்றி சமூக விமர்சனப் பணியை எப்படிச் செய்கிறது என்பதில்தான் இதழியலின் மரியாதையே அடங்கியிருக்கிறது என்று ஆழமான நம்பிக்கை வைத்திருக்கும் நிர்வாக ஆசிரியர் இரா.கண்ணன் ஆகிய அந்த மூவருக்கும் என் நன்றி என்றும் உரியது.
தொலைபேசி, கடிதங்கள் வாயிலாக என்னுடன் ‘ஓ!’ பக்கங்களைத் தொடர்ந்து விவாதிக்கும், எனக்கு முகம் தெரியாத வாசகர்களுக்கும், தெருவிலும் டீக்கடைகளிலும் ஓட்டல்களிலும் என்னைப் பார்த்த உடன் உரிமையுடன் நிறுத்தி அந்த வாரக் கட்டுரையை அலசும் வாசகர்களுக்கும் நன்றி. உங்கள் அக்கறைதான் என்னைத் தொடர்ந்து இயங்கவைக்கிறது.
இந்நூல் மனித நேயத்தையும் விமர்சனப் பார்வையையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளையும் கற்பித்த எட்டயபுரம் சுப்ரமண்யனுக்கும், ஈரோடு ராமசாமிக்கும் நன்றியுடன்…
- ஞாநி
Release date
Ebook: 30 September 2020
English
India