Fantasy
நாலு இடைவேளை விடும் (பிங்கிள் புரொஜக்டர் 1969) தேவகோட்டை சரஸ்வதி தியேட்டர் முதல், படத்தின் பதினான்கு ரீல்களும் ஒரே ரீலாக இணைக்கப்பட்டு, ஒரு பட்டனை தட்டுவதில் சுழலும் சத்யம் தியேட்டரில் ஓடும் திரைப்படங்கள் வரை சினிமாவை அணு அணுவாக விரும்பிப் பார்க்கும் செல்லுலாய்டு ரசிகன் நான்.
என்னுடைய ரசிக அனுபவம் என்பது என்ன? நான் எதற்காக சினிமா பார்க்கப் போகிறேன்?
குறிப்பிட்ட ஹீரோ நடித்த படம் என்பதற்காக சிலர் போவார்கள். அதில் வரும் கவர்ச்சி காட்சிகளுக்காக சிலர் போவார்கள்.
இசை, நடனம் முதலான பொழுதுபோக்கு அம்சங்களுக்காக சிலர் போவார்கள். சிலர் ரயிலேறும் அவகாசத்தில் டைம் பாஸ் பண்ண சினிமாப் பார்ப்பார்கள். இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன.
நான், ஒரு படத்தை விரும்பிப் பார்ப்பதற்கான காரணம், பார்க்கிற திரைப்படத்தில் கையாளப்படும் கதையம்சம்.
என்னைப் பெரிதும் கவர்ந்தது, பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவாகவும், கதையம்சம் அதிகமாகவும் அமைந்த திரைப்படங்களே. இப்போது நினைத்துப் பார்க்கிறபோது, கதை சொல்லப்பட்ட விதம், மற்றும் கதாபாத்திரங்களின் யதார்த்தம் இவையே ஒரு பார்வையாளனாக என்னை குறிப்பிட்ட சில படங்களை துரத்தி துரத்தி காதலிக்க வைத்திருக்கிறது.
கே.பாலசந்தர் பொழுதுபோக்கு அம்சங்களைவிட, கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். சொல்கிற கதைகளை வித்தியாசமாக சொல்ல நினைப்பவர். ரசிகர் கூட்டம் மொய்க்கிற நட்சத்திர நடிகர்களைப் போட்டு படம் எடுக்காதவர். தைரியமாக புதுமுகங்களை அறிமுகப்படுத்தியவர். நான் வேலைக்குச் சேர்ந்த இடம் திரைப்படங்களில் எதை நான் விரும்பி ரசித்தேனோ, அதை மேலும் மேம்படுத்துகிற இடமாகவே அமைந்தது. இயக்குனர் கே. பாலசந்தர் திரைப்படங்களில் காணப்படும் புதுமை, அழுத்தம் இவற்றுக்கு மட்டுமல்ல... அதே காலகட்டத்தில் தான் ரசித்தது... இயக்குனர் பாரதிராஜாவின் மண்வாசனை, 'மீடியம்’ மீதான ஆளுமை, இயக்குனர் மகேந்திரனின் யதார்த்தம், இயக்குனர் மணிரத்னத்தின் அழகியல் மற்றும் தொழில் நுட்ப மேன்மை.
இவைகளாலும் நான் பெரிதும் கவரப்பட்டேன். இந்தச் சூழலில் நான் இயக்குனராக அறிமுகமாகிறேன். ஜனரஞ்சக சினிமா வட்டத்திற்குள் இயங்கும் நான், என் சிறுவயது முதல் எதை ரசித்தேனோ, எதை விரும்பினேனோ, எதனால் எல்லாம் பெரிதும் கவரப்பட்டேனோ அவற்றையே என் திரைப்படங்களில் தர முயன்றேன் – முயல்கிறேன்.
பொழுதுபோக்கை விட கதையம்சத்திற்கே முதலிடம். யதார்த்தம், அழகியல், நட்சத்திர நடிகர்கள் இல்லாமல் படமெடுப்பது, புதுமுகங்களை அறிமுகப்படுத்துவது - இந்தக் கலவையே நான்.
மக்களுக்குப் பிடிக்குமா? நான் எடுக்கிற இந்தக் காட்சி, மக்களுக்கு, களிப்பூட்டுமா? நடிக்கிற நடிகரின் 'இமேஜி’ற்கு ஒத்துவருமா? என்று பார்த்துப் பார்த்து திரைக்கதை அமைப்பதில்லை. மாறாக, காட்சிகள் கதைக்குப் பொருந்துகிறதா, யதார்த்தமாக இருக்கிறதா, நம்பகத்தன்மையுடன் இருக்கிறதா? இவற்றைத்தான் அளவுகோலாக எடுத்துக் கொள்கிறேன். ஆனால், பொழுதுபோக்கு அம்சங்கள் பிரதானமாகவும், கதையம்சம் குறைவாகவும் அமையும் படங்களை தருவதே இப்போதைய 'டிரண்ட்' ஆக இருக்கிறது. எனினும் வரும் காலங்களில் என் திரைப்படங்களில் யதார்த்தத்தின் விகிதாச்சாரத்தை தீவிரப்படுத்தவே திட்டமிட்டிருக்கிறேன்.
உலக கிராமத்தில் வெளியாகும் திரைப்படங்களில் குரோஸாவா முதல் டேவிட் லீன், கோப்போலோ, ஸ்பீல்பெர்க், கீஸ்லா வெஸ்கி, சத்யஜித்ரே, மிருணாள்சென், அடூர், குருதத், ராஜ்கபூர், யாஷ்சோப்ரா, ராம்கோபால் வர்மா, ஸ்ரீதர், கே.பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன், மணிரத்னம், கமல்ஹாசன், ஷங்கர், விக்ரமன், பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் வரை நிறைய படைப்பாளிகளில் பெரும்பாலான படங்களை பார்த்திருக்கிறேன் - பார்க்கிறேன்.
இவர்கள் எடுப்பது என்ன? நான் எடுப்பது என்ன? யாருக்காக என்ன திரைப்படம் எடுக்கிறேன் என்பதை ஓரளவு புரிந்தே எடுக்கிறேன். என் திரைப்படங்களில் ஸ்பீல்பெர்க்கின் ஜாலமோ, குரோஸாவாவின் வீச்சோ, குருதத்தின் கவித்துவமான சோகத்தையோ காட்ட நான் முயல்வதில்லை. அதேபோல், ஷங்கரின் பிரும்மாண்டத்தையோ, கே.எஸ்.ரவிக்குமாரின் (அவரே 'தமிழ்திரை' பேட்டியில் குறிப்பிட்டபடி) இயல்பை மீறின கமர்ஷியல் படத்தையோ நான் பண்ணவில்லை என்பதும் அறிவேன்.
ஜனரஞ்சக சினிமா வட்டத்திற்குள் இயங்கும் போது, நான் எதை ரசித்தேனோ, எதற்கு ரசிகனாக இருக்கிறேனோ, அதுமாதிரியான படங்களை எடுக்கவே முயற்சி செய்கிறேன். அதாவது, மனித உறவுகளை அவர்களுடைய நுண்ணிய உணர்வுகளை, சிக்கல்களை, சினிமாவுக்கே உரிய அழகியலுடன் படம் பிடிக்க முயல்கிற ஒரு இயக்குனராகவே என்னை நான் பார்க்கிறேன்.
உங்கள், வஸந்த்
Release date
Ebook: 3 January 2020