‘பல்லவன் பாண்டியன் பாஸ்கரன்’இந்த பெயர்களை நான் தலைப்பாக வைத்தபோது ஆச்சரியமாக பார்த்தவர்கள் பலர். இது என்ன சரித்திரக் கதையா என்றும் அவர்கள் கேட்டார்கள். சரித்திரம் கலந்த சமூக மர்மக்கதை என்றேன். புதிதாக இருக்கிறதே என்றனர். இன்று இப்படி புதிது புதிதாக சிந்தித்தால் தான் கடைத்தேற முடியும் என்பது என் கருத்து. வ.வே.சு.ஐயர் காலத்தில் இருந்துதான் கதைகள் பத்திரிக்கைகளில் வர ஆரம்பித்தன. சிறுகதை, நாவல், குறுநாவல் என்று அதற்கு காரணப் பெயர்கள் மூன்றே மூன்றுதான். இதில் சமூகம், மர்மம், விஞ்ஞானம், சரித்திரம் என்று நான்கு தளங்கள்... இந்த தளங்களில் தான் கதைகள் பிறந்தாக வேண்டும். மூன்று வடிவங்களில் நான்கு தளங்களில் கடந்த 75 ஆண்டுகளில் கிட்டத்தட்ட லட்சம் கதைகளாவது எழுதப்பட்டிருக்கும். ஆனால் எத்தனை கதைகள் இதில் பளிச்சென்று நினைவில் இருக்கிறது? இன்றைக்கும் நாவல் என்றால் பொன்னியின் செல்வன், சிறுகதை என்றால் புதுமைப்பித்தன், மௌனி, குறுநாவல் என்றால் மகரிஷி என்கிற அளவுக்கு அதன் எல்லை சின்னதாகவே உள்ளது. காரணம் வித்தியாசமின்றி ஒரே பாட்டையில் ஒருவர் தொடர்ந்ததில் மற்றவர் பயணித்ததே காரணம் என்பது என் கருத்து. ஒருவகையில் நானும் அப்படிப் பயணிக்கின்ற ஒருவன் தான். நடுநடுவே இதை உணர்ந்து வித்தியாசமாக எதையாவது செய்தாலென்ன என்று கதை வடிவத்தில் வித்தியாசத்திற்காக யோசிக்கிறேன்.
அப்படி யோசித்தபோதுதான் ‘ஐந்துவழி மூன்று வாசல்’என்கிற சரித்திர சமூக நாவல் தோன்றியது. ஆனந்த விகடனில் வெளியாகி அது எனக்கு நல்ல பெயரையும் புகழையும் அளித்தது. அதன்பின் வடிவத்தில் புதுமையோடு நான் எழுதிய ஒரு நாவல் தான் இந்த ‘பல்லவன் பாண்டியன் பாஸ்கரன்.’குங்குமத்தில் தொடராக வந்தது. ஏற்கனவே குங்குமத்தில் விட்டுவிடு கருப்பாவையும், காற்றாய் வருவேனையும் எழுதியிருந்தேன். இது மூன்றாவது நாவல். குங்குமமும் சிறப்பாக வெளியிட்டு ஆதரித்தது. அதற்கு என் நன்றி. இந்த தொடரில் பல கிளைகள். சில கிளைகள் முழுமை அடையாமல் முடிந்ததுபோல் இருக்கும். காரணம் இது யானையைப் போல பருமனுள்ள ஒரு கரு! இதை நான் பானையில் அடைக்க முயற்சி செய்தேன். ஓரளவு வெற்றியும் பெற்றாலும் ஒரு நிறைவற்ற தன்மை அங்கங்கே தெரியக்கூடும். சில நேரங்களில் சில இடங்களில் குறைபாடுகளும் ஒரு அழகாகிவிடும். அப்படி இதை நான் எடுத்துக் கொண்டேன், மற்றபடி விறுவிறுப்புக்கு பங்கமின்றி தொடர் ஜெட்வேகத்தில் சென்றது என்றால் மிகையே கிடையாது. நீங்களும் படித்து விட்டுச் சொல்லுங்கள்.
Release date
Ebook: 6 April 2020