"ஹொய்சாளர்களாலும் அதற்குப்பின் டெல்லி சுல்தான்கள் படையெடுப்பின் காரணமாகவும் ஸ்ரீரங்க ரங்கநாதன் ஒரு தலைமுறைக் காலம் வரை வெளியூர்களில் உலாச் செய்து அதற்குப் பின் மீண்டும் திருவரங்கம் வந்தடைந்தார் என வரலாறு உரைக்கிறது. ஸ்ரீரங்கநாதர் அப்படி உலாச் சென்றதன் பின்னிணியில் சுல்தான்களின் படையெடுப்பு மற்றுமல்ல, அதற்கு நிலத்தைப் பிளந்து வெளிப்பட்ட ‘அபரஞ்சிப் பொன்’னால் ஏற்பட்ட விளைவுகள்தாம் காரணம் என்பதை எடுத்துரைத்து, எதனால் ஸ்ரீரங்கநாதர் விக்ரகம் வெளிச் செல்லவும் தாயார் விக்ரகம் மறைத்து வைக்கப்படவும் நேர்ந்தது என்பதை மிக விரிவாகவும், விளக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் எடுத்துரைக்கிறது ‘ரங்கராட்டினம்’ என்கிற சரித்திர, ஆன்மீக மர்மப் புதினம். ஸ்ரீரங்கம் ஆலயத்தில் ‘ஐந்து குழி, மூன்று வாசல்’ என்கிற விஷயம் புகழ்பெற்றது. ரங்கநாதர் வருகிறாரா என்று தாயார் கையை ஊன்றிப் பார்த்ததால் ஏற்பட்டதுதான் அந்த ஐந்து குழிகள் என்று சொல்வார்கள். உண்மயையில் பஞ்சேந்திரியங்கள் என்கிற படுகுழிகளை அடக்கி, ‘சித் அசித் ஈஸ்வரன்’ என்கிற மூன்று தத்துவங்களைப் புரிந்து கொண்டால் தாயார் நமக்கு பரமபதத்தை அடைய வழிசெய்வாள் என்பதைக் குறிக்கவே ‘அந்த ஐந்து குழி மூன்று வாசல்’ அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு குழி ஹொய்சாளர்களி்ன அழிவு, ஒரு குழி பாண்டிய சாம்ராஜ்யத்தின் சரிவு என்றெல்லாம் விவரித்துக் கொண்டே வந்துவிட்டு ஐந்தாவது குழிக்குத் தந்திருக்கும் விவரணம் பிரமிக்க வைக்கிறது. ஹொய்சள நாட்டில் (கி.பி.1253) சூரிய கிரகணத்தன்று பூகம்பம் ஏற்பட, மலை பிளந்து, அதன் பிளவுகளில் தூய அபரஞ்சிப் பொன் வெளிப்படுகிறது. செய்தி ஹொய்சள அரசன் வீரசோமேஸ்வரனுக்குப் போகிறது. அந்தப் பொன்னைப் பற்றிய விவரம் பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தர பாண்டியனுக்குத் தெரிந்தால் படையெடுத்து வந்து அபகரிக்கப் பார்ப்பான் என்பதால் அவனுக்குத் தெரியாமல் மறைக்க நினைக்கிறார்கள் ஹொய்சளர்கள். பாண்டியனுக்குத் தெரிந்து விட, யுத்தம் ஏற்பட்டு ஹொய்சள மன்னன் கொல்லப்படுகிறான். பாண்டியன் தங்கத்தை அபகரிக்கிறான். அதைக் கொண்டு திருவரங்கனுக்கு ஒரு பிரதிமை செய்துதர பாண்டியன் விரும்புகிறான். பாண்டியன் செய்த ‘பொன் வேய்ந்த பெருமாள்’ விக்ரகத்தை அரங்கன் கோயில் நிர்வாகத்தினர் ஏற்க மறுக்கின்றனர் தொடரும் நிகழ்வுகளில் அந்தப் பொன் பாண்டிய சாம்ராஜ்யத்தின் அழிவு்க்கு எப்படிக் காரணமானது என்பதும், சுல்தான்கள் படையெடுப்பினால் ரங்கநாதர் மறைந்துறைய வேண்டிய அவசியம் நேரிட்டதும், பொன் வேய்ந்த பெருமாளின் பின்னைய நிலையும் விவரிக்கப்படுகிறது. நாவலில். கலிபுருஷன், பரீக்ஷித்து மகாராஜாவிடம் வந்து ‘‘கலியுகத்தில் என் சாம்ராஜ்யம் பரவ வேண்டும். அதற்கு மக்கள் மனது பேதலிக்க வேண்டும். அதற்காக நான்கு இடங்களை நான் தேர்ந்தெடுத்து விட்டேன். மக்களின் மதியை மயக்கப் போகும் அவை: ஜீக்தம் (சூதாட்டம்), பானம் (மது), ஸ்திரீ (பெண்). சூன; (மாமிசம்) ஆகியவை. ஆனால் அவை போதாது. பெரிய அளவில் மக்கள் மனதை பேதலிககச் செய்ய ஒரு சாதனம் தேவை. அது என்னவென்பதை நீங்கள் சொல்லி உதவ வேண்டும்’’ என்று கேட்டார். பரீக்ஷித்து யோசித்துக் கொண்டே தன் இடக்கையில் அணிந்திருந்த சுவர்ண கணயாழியை வலக்கரத்தால் திருகிக் கொண்டேயிருந்தார். அது அவர் கையிலிருந்து நழுவி உருண்டோடி கலியின் காலடியில் விழுந்தது. அதைக் கையிலெடுத்த கலி ‘‘நல்லது மகாராஜா! அந்த ஐந்தாவது இடமாக சுவர்ணத்தை தேர்ந்தெடுத்து விட்டேன். இனி சுவர்ணத்தால் மக்கள் புத்தி பேதலித்து கொடுமைகள் புரிவார்கள்’’ என்று கூறி மறைந்தான். இந்த ஸ்வர்ணத்தின் காரணத்தால் ஏற்படும் மோதல்களையும், துரோகங்களையும், அநீதிக்கெதிரான நேர்மையாளர்களின் போராட்டங்களையும், அதற்கு அவர்கள் செய்த தியாகத்தையும், இடையில் மெல்லிய ஊடுபாவாக காதலையும் ரங்கராட்டினம் புதினம் விவரிக்கிறது. திருவரங்கத்தின் கிழக்கு கோபுரம் ‘வெள்ளாயி கோபுரம்’ என்றே அழைக்கப்படுகிறது. அதற்குப் பின்னணியில் நிற்பது வெள்ளாயி செய்த தியாகம். அந்த வெள்ளாயி யார் என்பதையும், எப்படி அவள் தன்னைத் தியாகம் செய்து அரங்கனைக் காப்பதற்குத் துணை நின்றாள் என்பதையும் கூறுகிறது." ஆசிரியரின் கூற்றுப்படி : நமது தர்மத்தை யார் காத்து நம்மிடம் கொடுத்துள்ளனரோ அவர்கள் தங்களை மகான்கள் என்றோ அவதார புருஷர்கள் என்றோ ஒருநாளும் கூறிக் கொண்டதில்லை. காடுகளிலும், மேடுகளிலும், குளிரிலும், வெயிலிலும் அலைந்து நூறு வயதைக் கடந்த ஒரு ஒப்பற்ற மகான் திருவரங்க அமுதனைக் காத்து நமக்குத் தந்திருக்கிறார். அவரைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? ‘நான்தான் கடவுள்’ என்று கூறிக் கொண்டு ஃபோர்ட் ஐகான் காரில் செல்பவர்கள் பின்னே மக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றனர். இந்த நாவல் அத்தகைய அடியவர்களின தியாகங்களை உரைக்கிறது.
© 2022 Storyside IN (Audiobook): 9789354838743
Release date
Audiobook: 4 February 2022