இராமநாதபுரம் மன்னருக்கு மகளாகப் பிறந்த வேலு நாச்சியார், பன்மொழிப் புலமை கொண்டவர்: ஆயுதம் ஏந்திப் போராடுவதில் வல்லமை மிக்கவர்: நிர்வாகத் திறமையிலும் தேர்ச்சி பெற்றவர்.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் வெள்ளையரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிக் களப்பலியானவர் இந்தியாவிலேயே முதல் மன்னர் வேலு நாச்சியாரின் கணவர் முத்துவடுகநாதர்தான். அது போன்று ஆயுதம் ஏந்திப் போராடிக் களத்தில் வெள்ளையரைத் தோற்கடித்து, இழந்த நாட்டை மீட்டுக்காட்டியவர் இந்தியாவிலேயே முதல் பெண்மணி வேலு நாச்சியார்தான்!
என்ன காரணத்தினாலோ, இன்றுவரை தமிழர்களால் போதுமான அளவுக்கு வேலு நாச்சியார் கண்டு கொள்ளப்படவில்லை. இது தமிழர்களின் வரலாற்று அறிவில் ஏற்பட்ட மிகப்பெரிய கரும்புள்ளியாகும். வேலு நாச்சியார் பற்றிய எனது தேடலின் போதுதான் அந்த வீரத் தாயின் ஆளுமை எனக்குப் புரிந்தது.
வேலு நாச்சியாரைப் பற்றி ஆங்காங்கே துண்டுதுண்டான செய்திகள் இருக்கின்றதே தவிர, அவரைப் பற்றி ஒரு முழுமையான நூல் இதுவரை தமிழில் வெளிவரவில்லை என்பது வேதனைக்குரியதாகும். வெளிவந்த ஒரு சில நூல்களும், எழுதியவர்களின் உள்மன உணர்வுகளுக்கு ஏற்றபடி அமைந்திருக்கிறதே தவிர, வேலு நாச்சியாருக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை.
இந்தப் பின்னணிதான் என்னை வேலு நாச்சியார் பக்கம் கவனம் திரும்பச் செய்தது!
Release date
Ebook: 14 July 2021