Step into an infinite world of stories
Fantasy & SciFi
சாமி படங்களிலிருந்து பழைய பூச்சரத்தை அகற்றி, சாமந்தி பூச்சரத்தை அணிவித்தாள் ராஜேஸ்வரி. காமாட்சி விளக்கை ஏற்றி விட்டு சூடத்தை தட்டில் வைத்து ஏற்றினாள். ராஜேஸ்வரியின் இதயத்தில் அடைந்துக்கிடந்த வேதனையெல்லாம் வெப்பத்தில் உருகி கண்களில் துளிர்த்தது. உதடுகள் நடுங்க “தாயே... தாயே...” என்று உச்சரித்ததேத் தவிர அதற்குமேல் அவளால் எதையும் கேட்க முடியவில்லை. சூடத்தட்டை கீழே வைத்துவிட்டு கைகூப்பி வணங்கி நின்றபோதுதான் “வெண்ணிலா” என்றலறிய நீலமேகத்தின் “பதட்டக்குரல் பதட்டமாய் ஒலித்தது. என்னவோ, ஏதோவென்று பதறிய ராஜேஸ்வரி பூஜையறையிலிருந்து ஹாலுக்கு ஓடிவந்தாள். “என்னங்க... என்ன ஆச்சு?” “வெண்ணிலா மயங்கி விழுந்துட்டா! இந்து ஓடிப்போய் தண்ணிக் கொண்டுவா!” “ஐயோ... கடவுளே... வெண்ணிலா... வெண்ணிலா!” என்று மகளின் கன்னத்தைத் தட்டினாள் ராஜேஸ்வரி. இந்துமதி தந்த தண்ணீரை முகத்தில் தெளித்தார். கண்கள் அசைந்து முயற்சித்து திறந்தது. “வெண்ணிலா... இங்கே பாரும்மா... அப்பாவைப் பாரும்மா!” பார்த்தவள் சிரிக்க முயன்றாள். “என்ன வெண்ணிலா... என்னம்மா பண்ணுது?” என்றாள் ராஜேஸ்வரி. அம்மாவைப் பார்த்ததும் அழுகை கொப்புளித்து வந்தது. புரிந்துக்கொண்டவராய் நீலமேகம் அவள் தலையை தடவிக் கொடுத்தார்வெண்ணிலாவை டிஸ்டர்ப் பண்ணாதே ராஜி! அவ ரெஸ்ட் எடுக்கட்டும்!” என்றவர் மகளை தாங்கிப்பிடித்தபடி அழைத்துச் சென்று கட்டிலில் படுக்க வைத்துவிட்டு மனைவியை தனியே அழைத்துச் சென்றார். “பாரு... ராஜி! அவள் செஞ்சது தப்புதான். அதுக்காக எப்பப் பார்த்தாலும் வார்த்தைகளால் கொன்னுட்டிருக்காதே! அவள் கண்ணீருக்குக் காரணம்... உன் உதாசீனம்தான். இந்த மாதிரியான நேரத்திலேதான் தாயோட அன்பும், அனுசரனையும் தேவை! உன்னைப் பார்த்து பிரதீபனும் இந்துமதியும் கூட அவளை உதாசீனம் பண்றாங்க!” “என்னங்க பண்ணமுடியும்? அவள் பண்ணிட்டுவந்த காரியம் அப்படி! நல்ல வழியிலே, கழுத்திலே தாலியோட அந்த கருவை சுமந்திருந்தா... அவளை நான் உள்ளங்கையிலே வச்சு தாங்குவேன்! இப்படி... எந்த ஆதாரமும் இல்லாம சுமந்திட்டு வந்திருக்காளே... எப்படி என்னை நான் சமாதானம் பண்ணிக்க முடியும்? பயமும், வெட்கமும் இல்லாம வளர்கிற பொண்ணுகளுக்கு நல்ல சாவு வராதுங்க!” “ச்சட் என்ன பேச்சு பேசறே? நல்ல நாளும் அதுவுமா உன் வாயால் உன் பொண்ணை சபிச்சிடாதே!” “இப்படி ஒரு அடங்காப்பிடாரியை பெத்ததுக்கு வாழ்த்தவா முடியும்? நாலு பேருக்கு தெரிஞ்சு அசிங்கப்படறதுக்குள்ளே கருவை கலைச்சிடலாம்னா... மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறாளே! இவளைவிட பெரியவள் கல்யாணம் ஆகாம இருக்காளே... அவளுக்கு ஒரு வழி பொறக்கலே... இவ வந்து அடைச்சிட்டாளே!” “எல்லாம் நல்லபடியே நடக்கும்ன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு ராஜி! யோசிச்சி. முடிவெடுப்போம்! அந்தப் பையன் பேரு என்ன சொன்னா?” “என்னமோ கார்த்திக்காம்! பெரிய பணக்கார வீட்டுப்பிள்ளையாம். எனக்கு நம்பிக்கையில்லேங்க! பணக்காரங்களுக்கும், மனசாட்சிக்கும் ரொம்ப தூரம். அந்தப் பையன் இவகிட்டே எதுக்குப் பழகினானோ அது கிடைச்சிட்டப்பிறகு, மறுபடி வருவானா? அந்த வண்டு வேறப் பூவைத் தேடிப்போயிருக்கும்! இதோப்பாருங்க. இதெல்லாம் நடக்காதக் காரியம். உங்கப் பொண்ணுக்கிட்டே நீங்கதான் பக்குவமா பேசணும். நாளாயிடுச்சின்னா ஒண்ணும் பண்ணமுடியாது. இந்த மயக்கம்கூட மசக்கையால வந்ததுதான்! இவள்ஒருத்தியோட பிடிவாதத்துக்காக என் மத்த குழந்தைங்களோட வாழ்க்கையை பலிகொடுக்க நான் தயாராயில்லே... சொல்லிட்டேன்!” பிடிவாதமாய், உறுதியாய் சொன்னாள் ராஜேஸ்வரி. நீலமேகம் கனத்த பெருமூச்சொன்றை வெளியிட்டார். அதேநேரம்... காலிங்பெல் அலறியது. கல்லூரிக்கு கிளம்ப தயாராகிக்கொண்டிருந்த பிரதீபன் வாசலுக்குப் போக... கைநீட்டித் தடுத்த நீலமேகம் தானேச் சென்று கதவைத் திறந்தார். ஒரு இளைஞன் நின்றிருந்தான்
© 2024 Pocket Books (Ebook): 6610000507801
Release date
Ebook: 13 January 2024
English
India