Step into an infinite world of stories
Fiction
வணக்கம்.
சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு அமெரிக்கன் புத்தகசாலையில் ‘சாட்டர்டே ரிவியூ” என்ற இதழில், வாரா வாரம் எட்மண்ட் ஃபுல்லர் என்ற எழுத்தாளர் ஒரு பத்தி எழுதி வந்தார். அதைத் தொடர்ந்து படித்து வந்தேன்.
அதில் அவர் பல சுவையான துணுக்குகளை எழுதுவார். இந்த துணுக்குகளின் சிறப்பு என்னவென்றால், எல்லாம் பல பிரபலங்களின் வாழ்க்கையில் நடந்த சின்னச் சின்ன சம்பவங்களாக இருக்கும். அதாவது ஆங்கிலத்தில் ANECDOTES என்பார்கள்.
சில மாதங்கள் கழித்து அவர் அந்தப் பத்தியை நிறுத்திவிட்டார். அதே சமயம் அந்த பதிவில் எழுதிய பல தகவல்கள் எல்லாம் தொகுக்கப்பட்டு ஒரு புத்தகமாக வெளிவர இருப்பதாகவும் எழுதியிருந்தார். சில வாரங்கள் கழித்து அந்த புத்தகம் வெளிவந்த தகவல் தெரிந்தது. எனக்கு அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அந்த எழுத்தாளரின் முகவரியைக் கண்டுபிடித்து, அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். “அவருடைய பத்தி மிகவும் சுவையாக இருந்தது என்றும், நான் இடையிலிருந்து படித்ததால் அதற்கு முந்திய வாரங்களில் எழுதியவற்றை நான் படிக்க இயலவில்லை என்றும் எழுதிவிட்டு, இப்போது புத்தகமாக வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, ஆனால் எனக்கு அந்த புத்தகத்தை இங்கு வாங்க முடியாது; ஆகவே எனக்கு ஒரு பிரதி அனுப்ப முடியுமா?” என்றும் கேட்டு எழுதி இருந்தேன்.
”உங்கள் முகவரியை தெளிவாகப் பெரிய எழுத்தில் எழுதி அனுப்புங்கள், நான் அனுப்புகிறேன்” என்று எழுதி இருந்தார். நான் அதன்படி எழுதி அனுப்பினேன். சில நாள் கழித்து அவர் கையெழுத்திட்ட புத்தகம் எனக்கு வந்தது . அதை மிகவும் ரசித்துப் படித்தேன். அதில் அவர் குறிப்பிட்டிருந்த பல பிரமுகர்கள் எனக்கு அறிமுகமான பெயராக இல்லை. ஆனாலும் தகவல்கள் சுவையாக இருந்தன.
முதன் முதலில் அமெரிக்காவில் அட்லான்டாவில் உள்ள ஒரு சர்வகலாசாலை புத்தகசாலைக்குச் சென்றபோது அங்கு என்னை பிரமிக்க வைத்தது அங்குள்ள பல ஷெல்ஃப்களில் நகைச்சுவைப் புத்தகங்கள், வரிசையாகப் இருந்துதான். அடுத்தது, வாழ்க்கை வரலாறு புத்தகங்கள். சுமார் 500, 600 இருந்தன. அவைகளைப் படித்து, அவற்றிலிருந்து சுவையானtஹ் தகவல்களை எடுக்க எனக்கு ஆர்வம் இருந்தாலும், அந்த பிரமுகர்களின் பெயர்கள் சிறிதும் அறிமுகமானதாக இல்லாததும், நான் அமெரிக்காவில் தங்கும் காலத்திற்குள் ஒன்றிரண்டு புத்தகத்தைக் கூட படிக்க முடியாது என்பதாலும் அவற்றைப் புரட்டிக் கூடப் பார்க்கவில்லை.
ஆனால், பல பிரமுகர்களைப் பற்றிய சின்னச் சின்ன சம்பவங்களைக் குறித்து வைத்துக் கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. அது மட்டுமல்ல, வாழ்க்கை வரலாற்று நூல்களை வெறுமனே புரட்டும்போது சில துணுக்குச் சம்பவங்கள் கண்ணில் படும். அவற்றைக் குறித்து வைத்துக் கொள்வேன்.
பார்க்கப்போனால் இந்த மாதிரி சின்ன தகவல்களில்தான் அந்த பிரமுகரின் உண்மையான குணமும், சிறப்பும் தெரிய வருகின்றன என்று நான் கருதுகிறேன். ஒரு பிரமுகரைப் பற்றிய இது மாதிரித் துணுக்குத் தகவல் ஒரு சோறு பதம் மாதிரி அமைகிறது என்று நான் கருதுகிறேன். படித்துவிட்டு நீங்களும் அப்படிக் கருதுவீர்கள் என்றும் எண்ணுகிறேன்.
என் நினைவிலும் வாழ்விலும் எனக்குத் தெய்வமாக விளங்கும் அமரர் கல்கி அவர்களின் பொற் பாதகமலங்களைச் சிரத்தால் வணங்கி, கண்களில் ஒற்றிக் கொண்டு, இப்புத்தகத்தைச் சமர்ப்பிக்கிறேன். அவருடைய ஆசி இப்போதுபோல் என்றும் எனக்குக் கிடைப்பதாக!
- கடுகு
Release date
Ebook: 3 January 2020
English
India