Step into an infinite world of stories
“பணத் திமிரைக் காட்டுகிறாயாடீ? இப்படித் தனியே என்னிடம் வந்து நிற்க, உனக்கு வெட்கமாயில்லை? அதெங்கே? வெட்கமாவது? மானமாவது? நீங்கள் எல்லோருமே, ஒரே ரகம், கூடைச் செங்கல்லும் பிடாரிகள்தான், பணம் படைத்த பிசாசுக் கூட்டம்! ஓடு, எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு போ, நிற்காதே! போ! என்ன முழிக்கிறாய்? உடனே போகாவிட்டால்... உன்னை...” என்ன கடுமையான குரல் சொல்! நினைவறிந்ததில் இருந்து, அவள் கேட்டறியாத கொடுமையான பேச்சு! பேச்சுடன் கூடவே அவனது கை விரல்கள் முஷ்டியாக இறுகுவதைப் பார்த்த சுரபிக்கு, அவன் தன்னை அடித்தே விடுவானோ என்கிற பயமே வந்துவிட்டது, அவ்வளவுதான், அதற்கு மேல் அவள் அங்கே ஏன் நிற்கப் போகிறாள்? அவள் புறமாக அவன் வீசி எறிந்த மருந்துப் பொருட்களை அள்ளிக்கொண்டு விழுந்தடித்து அவர்களது குடும்பம் தங்கியிருந்த அறைக்கு ஒரே ஓட்டமாக ஓடிச் சென்றுவிட்டாள், ஓடி வந்து மூச்சு வாங்கிக்கொண்டு நின்றபோதுதான் நல்லவேளையாக அம்மா அப்பா அண்ணன் யாருமே அங்கே இல்லை என்பதை ஓர் ஆறுதலோடு உணர்ந்தாள், அவள், இல்லாவிட்டால் என்ன என்ன நடந்தது ஏன் ஓடி வந்தாய் என்று அவர்களது பல கேள்விகளுக்கு அவள் பதில் சொல்ல நேர்ந்திருக்கும்! கெட்டதிலும், ஏதோ நல்லகாலம்! அந்த ஒரு சங்கடத்திலிருந்து தப்பித்தாள்! அன்பும் கரிசனமுமாகக் கேட்பதுதான்! ஆனால், அந்தக் கதிரவனின் இந்தக் கோபம் பற்றி, அவளுக்கே ஏதாவது புரிந்தால்தானே, மற்றவர்களுக்குச் சொல்வதற்கு? ஒன்றுமே இல்லாததற்கு... சொல்லப் போனால், அவனுக்கு உதவி பண்ணத்தான், அவள் சென்றது, ஆனால், அதில், அவன் இவ்வளவு கோபப்பட என்ன இருக்கிறது? அவனுக்கு ஒரு மோசமான காயம் பட்டிருந்தது, துருப்பிடித்த இரும்புத் தகடு கிழித்த காயம், அதற்கான மருந்துகளை எடுத்துச் சென்றாள், அவ்வளவே! அடுத்த பிழை கட்டாந் தரையில் படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவனின் கையில் பட்டிருந்த காயத்தில் மருந்திட்டதுதான்! ஆனால் அது எப்படித் தப்பாகும்? அப்போதும்கூட அவனைத் தொட்டு மருந்துபோட அவள் தயங்கத்தான் செய்தாள், ஆனால் அப்போது பார்த்து அவனது காயத்தில் ஓர் ஈ வந்து உட்காரவே இது எவ்வளவு பெரிய ஆபத்து என்று, அவள் மனம் கலங்கிவிட்டது, ஆனால், அவள் மென்மையாகவே மருந்தைப் பூசினாலும், விழித்துவிட்டானே! தூக்கம் கலைந்த கோபத்தில் கத்தினானோ? ஆனால், மருந்தைப் பார்த்த பிறகேனும், அவள் வந்த நோக்கம் தெரிந்துதானே இருக்கும், அப்புறம் என்ன கோபம்? ஒரு வேளை, சுரபியும், அவளுடைய ஒன்றுவிட்ட சகோதரிகளும் சேர்ந்து நின்று, அவனைப் பற்றிப் பேசி, அவனது கவனத்தைக் கலைக்காமல் இருந்திருந்தால், அவனுக்கு இந்தக் காயமே ஏற்பட்டிராது என்று எண்ணினானோ? அதனால் தான், எல்லோரையும் சேர்த்து ஒட்டு மொத்தமாகப் பெண்களே மகா மோசம் என்றானோ? ஆனால், ஒரு சாதாரணமான கிண்டல் பேச்சைப் போய், யாரேனும் இப்படித் தப்பாக நினைப்பார்களா?
© 2025 PublishDrive (Ebook): 6610000859979
Release date
Ebook: 23 May 2025
English
India